tamilnadu

img

கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியது

திருவண்ணாமலை,மே 15-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அல்லியந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் அல்லியந்தல் கிராம லூர்து மாதா கோயில் திருவிழா நடைபெற்றது. அதில் மாட்டு வண்டிகளில் மாதா சிலை வைத்து அலங்காரத்துடன் ஊர்வலம் நடத்தியுள்ளனர். 15 அடி உயர மாதா சிலை ஊர்வலம், வண்ணாரப்பேட்டை சாலை அருகே சென்றபோது, அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதால் மாதா சிலை ஊர்வலம் சென்ற மாட்டு வண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் வண்டியின் அருகில் சென்ற அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த ஞானசுந்தரம் மகன் சைலாப் ஜபராஜ் (40), பரசுராமன் மகன் அன்பரசு (50) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும், பிரான்சிஸ் மகன் ஜான் (30), ஞானமூர்த்தி மகன் பிளோமின்ராஜ் (42) ஆகிய இருவரும் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.