tamilnadu

ஊசலாடும் உயிர்களுக்கு பாதுகாப்பு இருப்பதா? திருவண்ணாமலையில் தத்தளிக்கும் விவசாய குடும்பம்

திருவண்ணாமலை, மே 23-திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சீனு (32) வேன் ஓட்டுநராக இருந்தார். இவர் ஆரணியிலுள்ள சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, சொந்தமாக ஒரு வேன் வாங்கி உள்ளார். மேலும் சிலரிடம் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது.கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக மன உலைச்சலில் சீனு தவித்து வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து, கடந்த திங்களன்று(மே20) ஆரணி சுந்தரம் பைனாஸ் நிறுவனத்தினர் சீனு வீட்டிற்கு சென்று, அவரை மிரட்டி யுள்ளனர்.  மேலும், இவருக்கு சொந்தமான வேனை,  ஜப்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சீனு குடும்பத்தி னருடன், அருகில் உள்ள, இமாபுரம் பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதில் சீனுவின் மனைவி விஜயலட்சுமி(24), மகன் ரித்திக் ரோஷன் (6) ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து சீனு (32) அவரின் மகள்கள் தீவதர்ஷினி (11), பிரிதிஸ்ரீ(8)  ஆகியோருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  புதன் அன்று சிகிச்சை பலனளிக்காமல் தீவதர்ஷினியும் உயிரிழந்தார். இதுகுறித்து, சீனுவின் அண்ணன் மஞ்சுநாதன், அவரின் மனைவி ரேவதி ஆகியோர் கூறியபோது, எனது தம்பி சீனு, ஆரணி, சுந்தரம் பைனான்ஸ்சில் கடன் பெற்று, வேன் வாங்கி தொழில் செய்து வந்தார். 16 தவணைகளில் கடனை திருப்பி செலுத்திவிட்டார். சமீபத்தில் வேன் பழுதானதால் சில தவணைகளை கட்டமுடியாமல் போனது, அதனால் சுந்தரம் நிதி நிறுவன ஊழியர்கள் காரில் வந்து, எனது தம்பியை கடுமையாக மிரட்டினர். வீட்டில் இருந்த பெண்களை ஆபாசமாக பேசினர் இதனால் மனமுடைந்த, சீனு குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றார்.தினமும் ஒருவர் உயிரிழப்பதால், உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது, ஊசலாடும் உயிர்களுக்கு பாதுகாப்பு இருப்பதா? என்று தத்தளித்து வருவதாக தெரிவித்தனர். வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சீனு குடும்பத்தினரை சந்தித்து, சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். பின்னர், ஒரு குடும்பத்தையே தற்கொலைக்கு தூண்டிய நிதிநிறுவன நிர்வாகிகளை விசாரணை செய்து, அந்த விசாரணையின் அடிப்படையில்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.