tamilnadu

img

பூ வியாபாரத்திற்கு இடம் ஒதுக்க கோரி விவசாயிகள், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 27- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள்  மலர் சாகுபடி செய்கின்றனர். அந்த பூக்களைத் திருவண்ணாமலை பூ சந்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக மலர் சந்தை   திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிகமாக மலர் சந்தை   செயல்பட்டு வந்தது. அங்கு விவசாயிகள் பூக்களை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையே திருவண்ணாமலையில்  தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்கும் மலர் சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மலர்   சாகுபடி செய்து வரும் விவசாயிகளும், பூ வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படுகின்றனர். இதனால், தடையை மீறி பூ வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகளையும், விவசாயிகளையும் வருகிற 1ஆம் தேதி வரை மலர்  வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்று காவல்துறையினர் கூறினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலர் விவசாயிகளும், மலர் வியாபாரிகளும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மலர் சந்தை  மீண்டும் செயல்பட இடம் ஒதுக்க வலியுறுத்தினர். அவர்களுடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா பரவல் குறைந்ததும் வருகிற 1ஆம் தேதி முதல் மலர் சந்தை  மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.