திருப்பூர், ஜூன் 2 -திருப்பூர் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை காவல் துறையினர் கைப்பற்றினர்.அந்த ஆண் சடலம் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. எனவே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் நிலையத்தார் மற்றும் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகிலேயே ரயில்வே கூட்செட் உள்ளது. சுற்று வட்டாரத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் என்பதும், அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் எனவும் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவரிடம் ஆறு செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.