உரிய ஆவணங்கள் இன்றி தங்கிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது
திருப்பூர், மே 28 –திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது தொடர்பாக வங்க தேச இளைஞர்கள் 19 பேரை வேலம்பாளையம் காவல் நிலையத்தார் கைது செய்தனர்.திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி, பின்னலாடை நிறுவனங்களில் வங்க தேசத்தினர் பலர் வேலை செய்து வருகின்றனர். திருப்பூர் 15 வேலம்பாளையம் அத்திமரத்தோட்டம் பகுதியில் இது போல் தங்கியிருந்த வங்க தேசத்தினரை காவல் துறையினர் திங்களன்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் வங்க தேசத்தைச் சேர்ந்த இவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆலம்கிர், சுமான், மன்சுருல் ஹக், அப்துல் கலாம், குன், டோலன் உசேன், முக்தார் மியா, சோஸிப் மியா, ஆசிக், லால்மியா, முகமது கபிர் உசேன், முசருள், ஷாமிள், ஹபிபுர், குகுன், ரபிகுள் இஸ்லாம், ஜயிதுல் இஸ்லாம், பிஜாய், ஜஹாங்கீர் ஆலம் ஆகிய 19 பேரை காவல் துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர்.
குழந்தைகள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்
திருப்பூர், மே 28 –ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறப்பதை முற்றாக தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மே 28 முதல் ஜூன் 8 வரை இரண்டு வார கால விழிப்புணர்வு முகாமை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை நடத்துகிறது.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு முகாமின் முதல் ஆறு நாட்கள், ஜூன் 2ஆம் தேதி முடிய அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் என 1840 பணியாளர்கள் மூலம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரைக் கரைசல் பவுடர் வீடு, வீடாக வழங்கப்பட உள்ளது. அத்துடன் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் பவுடருடன் துத்தநாக சத்து மாத்திரைகளும் வழங்கப்படும்.இரண்டாவது வாரத்தில் ஜூன் 3 முதல் 8 வரை தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து தாய்ப்பால் வார விழா அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கொண்டாடப்படும். இவ்விழாவில் குழந்தைகளுக்கு சரியான உணவு அளிக்கும் முறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அருந்துதல் மற்றும் முறையாக கை கழுவுதல் மற்றும் தன்சுத்தம் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் பள்ளிகளின் மூலம் மேற்கொள்ளப்படும்.இம்முகாம்கள் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 2 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக மாமனார் வீட்டின் முன்பு பெண் தர்ணா
திருப்பூர், மே 28 –திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகன் ஆனந்த் (29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ரத்தினசாமி, கண்டியம்மாள் தம்பதியரின் மகள் திவ்யா (26) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இரு வீட்டார் எதிர்ப்பின் காரணமாக பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் கொடுத்து இருதரப்பினரிடையே சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புதுமணத் தம்பதியினர் ஆனந்தின் பெற்றோர் உதவியுடன் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்குச் செல்லும் ஆனந்த், தினமும் தனது மனைவியை அடித்து உதைத்து தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த இருநாட்களாக ஆனந்த் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து திவ்யா தனது மாமனார் வீட்டிற்குச் சென்று கணவரைக் காணவில்லை என தெரிவித்துள்ளார். அப்போது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் சிலர் திவ்யாவை வீட்டை வெளியே தள்ளி கதவைப் பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது கணவரை மீட்டுத் தரக்கோரியும், இடையூறாக இருக்கும் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே தனிக்குடித்தனம் இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிலிருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியே வீசிவிட்டு கதவையும் பூட்டிச் சென்றுள்ளார். இளம் பெண்ணின் தர்ணாப் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர், இருதரப்பினரிடையே இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.