திருப்பூர், மே 27 – திருப்பூர் மாநகரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பிளக்ஸ் தட்டிகளை தீயிட்டு எரித்தும், கிழித்தும் சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருப்பூர்போயம்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் வி.எஸ்.சசிக்குமார் ஞாயிறன்று அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளரிடம் அளித்தபுகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கே.சுப்பராயனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சக்திநகர் ரேசன் கடை அருகில் ஒரு பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டது. ஞாயிறன்று மாலை அவ்வழியாகச் சென்றபொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டியைக் காணவில்லை. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த இடத்தில் விஷமிகள் சிலர் நின்று கொண்டிருந்ததாகவும், இருவர் தட்டியைக் கழற்றி அருகில் உடைத்துப் போட்டு தீ வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் விசாரித்தபோது அவர்களில் ஒருவர் பெயர்முத்துக்குமார், மற்றொருவர் பெயர் முகிலன் எனத் தெரியவந்தது. எனவே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட தட்டியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சசிக்குமார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.முன்னதாக, இதேபோல் திருப்பூர் 20ஆவது வட்டம் போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திமுக கழக கூட்டணிக் கட்சியான ஐ.ஜே.கே.,கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பேனர் வைத்தனர். இந்நிலையில் அந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இது குறித்து திருப்பூா் அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருப்பூர் தெற்குநகரில் ஒரு இடத்திலும் கே.சுப்பராயனை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரின் ஒருபகுதியையும் விஷமிகள் கிழித்துவிட்டனர். இவ்வாறு தொடர்ந்து அடுத்ததடுத்து இரண்டு மூன்று இடங்களில் இது போல் பிளக்ஸ் தட்டிகள் சேதப்படுத்தும் சம்பவம் நடைபெற்றும், குற்றம் செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தும் கூட காவல் துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.