tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் போராட்டத்தின் எதிரொலி - முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர் பணியிட மாற்றம்!

உடுமலை, ஆக.20 - கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக சார்பதிவாளரை பணியிட மாற்றம் செய்து பத்திரப்பதிவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தாமோதரன் சார்பதிவாளராக வேலை செய்து வந்தார். அப்போது ஆள் மாறாட்டம், நீதிமன்ற வழக்குகளில் இருக்கும் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜூலை 5, ஜூலை 30 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ஆக்.19 ஆம் தேதி கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக சார்பதிவாளர் தாமோதரன் நாகப்பட்டினம் நிர்வாகப்பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா செயலாளரும், தொடர் போராட்டத்திற்குத் தலைமை வகித்த எம்.எம்.வீரப்பன் கூறுகையில், கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக தாமோதரன் பதிவு செய்த அனைத்து பத்திரங்களையும் மாவட்ட நிர்வாகத்தினர், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆவணங்களை வைத்து ஆய்வு செய்ய வேண்டும். தவறாக பதியப்பட்ட பத்திரங்களை உடனடியாக ரத்து செய்து, உரிய நபர்களுக்கு மீட்டு தர வேண்டும். போலியான ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பத்திர எழுத்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து அவரின் சொத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அனைத்து அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.