tamilnadu

img

ரம்ஜான் கொண்டாட்டம்: பிரியாணி விற்பனை அமோகம்

திருப்பூர், ஜூன் 5–இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின்போது திருப்பூரில் பல்வேறு தரப்பு மக்களும் பிரியாணி கடைகளில் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.ரம்ஜான் என்றால் பாய் வீட்டு பிரியாணி என்பது நினைவுக்கு வரும். புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்கள் தங்கள்நண்பர்களுக்கு பிரியாணி வழங்கி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரியாணி விருந்து படைத்தனர். அதேசமயம் பாய் வீட்டு பிரியாணி கிடைக்காவிட்டாலும் ரம்ஜானுக்கு பிரியாணி வாங்கிச் சுவைக்கலாம் என்று பலரும் ஆர்வத்துடன் கடைகளில் பிரியாணி பார்சல் வாங்கினர்.குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெரியகடை வீதி பகுதிகளில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் நீண்ட வரிசையில் பலர் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். சுவைக்குப் பெயர்பெற்ற குறிப்பிட்ட சில கடைகளில் கூட்டம் வந்து கொண்டே இருந்ததால் ஒருபுறம் பிரியாணி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் மீண்டும் பிரியாணி தயாரித்துக் கொண்டிருந்தனர். நகரின் பல பகுதிகளிலும் பிரியாணி கடைகளில் வழக்கத்தை விட அதிகமானோர் கூட்டமாக நின்று பிரியாணி பார்சல்கள் வாங்கிச் சென்றனர்.