திருப்பூர், ஜூன் 29 – இந்தியாவில் முதலீடு செய்ய வரும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கத் தேவையான நடவடிக்கையை எடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது. அதற்கு ஏற்றார்போல் தொழிலாளர் சட்ட உரிமைகளை ‘சீர்திருத்தப்’ போவதாகக் கூறுகிறார்கள். இதற்கு எதிராகப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டும் என்று சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார். சிஐடியு திருப்பூர் மாவட்ட 12ஆவது மாநாட்டை ஊத்துக்குளி தோழர் சுரேஷ் நினைவரங்கில் சனியன்று தொடக்கிவைத்து ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது: நாட்டின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயகத் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி முடிந்திருக்கிறது. நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையை, அரசியல் சாசனத்தின் மாண்புகளை, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் லட்சியங்களைப் பாதுகாக்கக் கூடியதாக இந்த தேர்தல் திருவிழா இருந்ததா? கடந்த ஐந்தாண்டு காலம் என்ன நடந்தது? தொழிலாளர் உரிமைப் பறிப்புக்கு எதிராக, ஜனவரி 8, 9 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். பெரிய தொழிற்சாலைகள் முதல் சிறு,குறு தொழில்கள் வரை வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், கட்டுமானம், சாலையோரம், ஆட்டோ என முறைசாரா தொழிலாளர்கள், திட்டப் பணியாளர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தாக்குதலுக்கு உள்ளான சிறுபான்மையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு காலத்தில் எண்ணற்ற போராட்டம் நடந்தது. ஆனால் தேர்தல் திருவிழாவில் மக்கள் வாக்களிப்பதற்கு முன்பாக, அவர்கள் சந்தித்த கடுமையான வாழ்வாதாரப் பிரச்சனைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, திசை திருப்ப ஆட்சியாளர்களால் முடிந்திருக்கிறது. அடிப்படைப் பிரச்சனைகளை முன்னுக்கு நிறுத்த தொழிற்சங்கங்களால் இயலாமல் போய் விட்டது. எண்ணற்ற போராட்டம், எதிர்ப்புகளுக்குப் பிறகும் எப்படி அவர்களால் வெற்றி பெற முடிந்தது, எப்படி இந்த சூழல் உருவானது என்பதை நாம் விவாதிக்க வேண்டும். தமிழகத்தில் நிலைமை வேறாக இருந்தாலும் இந்திய நாட்டு உழைப்பாளி மக்களில் கணிசமானோரின் ஆதரவை, இத்தனை கொடுமைகள், அநியாயம் இழைத்த பிறகும் மத்திய ஆட்சியாளர்கள் பெற முடிந்தது; மக்கள் பிரச்சனைகளை ஒட்டுமொத்தமாக பின்னுக்குத் தள்ளி, புல்வாமா, பாலக்கோட் பிரச்சனைகளை முன்வைத்து ‘பதிலடி கொடுக்கும்’ பிரதமர் தேவை என்ற கருத்துக்களை தீவிரமாக பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது. மோடிஆட்சி பதவியேற்றவுடன், புதிய அரசு புதிய சீர்திருத்தத்தை விரைவாக நிறைவேற்றும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியிருக்கிறார். 47 பொதுத்துறை நிறுவனங்களை உடனடியாக தனியாருக்கு தாரை வார்க்கப் போவதாகவும், தொழிலாளர் சட்டங்களில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்யப் போவதாகவும், நாட்டில் முதலீடு செய்யவருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்கின்றனர். நாம் முதலீடு வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்த்து இதைச் செய்வது நாட்டு நலனுக்கு எதிரானது என்கிறோம். எனவே வரக்கூடிய காலம் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதாக, புதிய தாக்குதல் நடத்தப் போவதாகவே இருக்கும். இதை எதிர்த்து முறியடிக்க நாம் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க, தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்க, அதை வலுப்படுத்த களத்தில் பணியாற்ற வேண்டும். காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில மாநாடு மற்றும் சென்னையில் அடுத்தாண்டு நடைபெறும் அகில இந்திய மாநாட்டுச் செய்திகளை ஒவ்வொரு தொழிலாளியிடமும் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் கூறினார்.