tamilnadu

மாணிக்காபுரம் புதூர் கூட்டுறவு சங்கத் தேர்தல் புறக்கணிப்பு மோசடிக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முடிவு

திருப்பூர், ஜூன் 6 -மாணிக்காபுரம் புதூர் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்து மோசடி செய்தவர்களே ஆளும் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் நிலையில், மோசடிக்கு எதிராக தேர்தலைப் புறக்கணிப்பது என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதலிபாளையம் ஊராட்சி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.விஸ்வலிங்கசாமி வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கே.2040 மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று) நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதில் ஏற்கெனவே மேற்படி சங்கத்தில் தலைவர், துணைத்  தலைவர்மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்த சமயத்தில்தான் பணம் கையாடல் நடந்துள்ளது. இதில் வங்கிச் செயலாளர் மோசடியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்திகளும் வெளியாகி உள்ளன. மேலும் இந்த மோசடி குறித்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி 81 உத்தரவின் கீழ் விசாரணை அலுவலர் மூலம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக விசாரணை இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்த ஆளும் கட்சியினர் மீண்டும் தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகவோ, நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவோ வந்தால் மோசடிதொடர்பான விசாரணை கேள்விக்குறியாகும். அத்துடன் சாட்சிகளைக் கலைத்து மோசடியை திசை திருப்பவும் முயற்சிப்பார்கள்.எனவே தற்போதைய சூழலில் விசாரணை முடியும் வரை தேர்தலைத் தள்ளி வைக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தும் பயனில்லை. சென்னை நீதிமன்றத்திலும் தேர்தலைத் தள்ளி வைக்க தடையாணை கோரப்பட்டுள்ளது.எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து இன்று நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் பங்கேற்காமல் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு விஸ்வலிங்கசாமி தெரிவித்துள்ளார்.