tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனத்தில் பரிசோதனை

 அவிநாசி, ஏப்.24- அவிநாசியில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி, அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உள்பட்ட தேவராயம்பாளையம், உமைஞ்செட்டிபாளையம், ராக்கியாபாளையம், அவிநாசி மங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் 31 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதிகள் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளும் தடுப்புகள் அமைத்து "சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ள தேவராயம்பாளையத்தில் பகுதியில், ஏற்கனவே 3 முறை பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, இப்பகுதியில், தனிமைப்பட்டவர்களுக்கு, நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை காலை முதல் பரிசோதனையைத் துவங்கினர். இருப்பினும் பொதுமக்களில் பலர் பல்வேறு காரணங்களைக் கூறி பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.