tamilnadu

நான் திருடவில்லை: வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி, மார்ச் 1- அவிநாசியில் வங்கியில் பணம் திருடிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அலுவலக உதவியாளர் மன முடைந்து வங்கியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி நேரு வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). இவர் தனது மனைவி கற்பகம் மற்றும் ரம்யா தேவி, ராஜேஸ்வரி ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.  இவர் அவிநாசியில் உள்ள கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.          இந்நிலையில் கணேசன் வங்கியில் வாடிக்கையாளரின் பணம் ரூ.60 ஆயிரத்தை திருடிவிட்டதாகவும், அது குறித்து சிசிடிவி காட்சிகள் உள்ளதாகக் கூறப்பட்டது. எனவே, உடனடியாக திருடிய பணத்தை வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் போலீசில் புகார் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், தன் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்துவதாக வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலரிடம் சொல்லி வருந்தப்பட்டுள்ளார்.  இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதையும் மீறி தன் மீது போலீசில் புகார் அளித்தால் வங்கியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கணேசன் கூறியுள்ளார்.  இதையடுத்து சனியன்று காலை வங்கியில் உள்ள உணவு உண்ணும் அறையில் திடீரென கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.