அவிநாசி, ஏப்.20- அவிநாசி வட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு ரேபிட் ஆன்டி பாடி பரிசோதனை செய்யப்பட்டது.
அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி, அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உள்பட்ட தேவராயம்பாளையம், உமைஞ்செட்டிபாளையம், ராக்கியாபாளையம், அவிநாசி மங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் 23பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதிகள் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனைத்துப் பகுதிகளும் தடுப்புகள் அமைத்து "சீல்' வைக்கப்பட்டுள்ளன. "சீல்' வைக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேறவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவும் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ரேபிட் ஆன்டி பாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற பரிசோதனையில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மருத்துவர்கள் ராஜேஸ், மோகன்ராஜ், விக்னேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன், கோவிந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஈசுவரமூர்த்தி, குணசேகரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, ஆய்வக நுட்பநர்கள், கிராம செவிலியர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.