tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் 1821 தீக்கதிர் சந்தாக்கள் சேர்ப்பு ரூ.26.5 லட்சம் தொகை ஒப்படைப்பு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஒரு மாதகால தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்புஇயக்கத்தில் மொத்தம் 1821 சந்தாக்கள்சேர்க்கப்பட்டன. இதன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.26 லட்சத்து 53 ஆயிரத்து800 சந்தா தொகையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் பலத்த கரவொலிக்கு இடையே ஒப்படைத்தார்.இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம், 21ஆம் ஆண்டு தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்புநிகழ்ச்சி திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் வியாழனன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையைப் பெற்றுக் கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக இந்நிகழ்வில் குடிமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா வரவேற்றார். தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர்எஸ்.ஏ.மாணிக்கம், தீக்கதிர் எண்மப் பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், மார்க்சிஸ்ட்  கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் தீக்கதிர் சந்தா சேர்ப்பு மற்றும் இன்றைய அரசியல் நிலை குறித்து உரையாற்றினர்.இந்த நிகழ்வில் குரல் குட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சார்பில்உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், நிர்மல் பள்ளி நிதி ஆயிரம் ரூபாயையும் அங்கேரிபாளையம் ஆர்.என்.ரத்தினசாமி ,நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தையும் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினர்.இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூறு பேர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நிகழ்வின் நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் நன்றி கூறினார்.மொத்தம் சேர்க்கப்பட்ட சந்தாக்களில் 5 ஆண்டு சந்தாக்கள் 21, ஓராண்டு சந்தா 1584, ஆறு மாத சந்தா 216.மொத்த சந்தாதொகை ரூ.26 லட்சத்து 53 ஆயிரத்து 800மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘‘தீக்கதிர் நாளிதழ் விற்பனையை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். அதிகாலை 4 மணிக்கு எழுந்து தீக்கதிர் நாளிதழை வாசகர்களுக்குக்  கொண்டு போய்ச் சேர்க்கும் விநியோகிப்பாளர்கள், தொண்டர்களுக்கெல்லாம் தொண்டர்கள் ஆவர். அவர்களது சேவைக்கு இணையில்லை. மற்ற நாளிதழ்களில் வரும் வழக்கமான செய்திகள் தீக்கதிரில் வருவதில்லை. ஆனால் தீக்கதிரில் வெளி வரும் செய்திகள் வேறெந்த நாளிதழிலும் வருவதில்லை. தீக்கதிர் வாசித்தால் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தீக்கதிர் வாசகர்கள் அரசியல் தெளிவு பெற்றவர்களாக  இருப்பார்கள். இன்றைய அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அன்றாடம் வாசகர்களிடம் பேசும் தோழனாக தீக்கதிர் திகழ்கிறது.”