tamilnadu

வீடுகளில் திடீர் தீ விபத்து தாராபுரம் துணை ஆட்சியர் ஆய்வு

தாராபுரம், மே 14 -தாராபுரம் அருகே வீடுகளில் திடீரென தீ பிடிப்பதாக பொதுமக்கள் கூறியதால், அப்பகுதியில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தாராபுரம் அடுத்த எம்.காளிபாளையம் வாளநாய்க்கன்வலசில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஞாயிறன்று இரவு அங்குள்ள சில வீடுகளில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊர் பொதுவிடத்தில் கூடி அங்கேயே உணவு சமைத்து திடீரென தீப்பிடிப்பதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாராபுரம் துணை ஆட்சியர் பவன்குமார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மூலனூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் மற்றும் அறிவியல் ஆய்வாளர் ஆகியோர் தடயங்களை பதிவுசெய்து சோதனைக்கு எடுத்த சென்றுள்ளனர். இப்பகுதி பொதுமக்கள், அரசு சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என துணை ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்வதாகவும், நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.