tamilnadu

குளம், குட்டைகளில் மண் திருடிய 4 டிப்பர் லாரிகள்; இருவர் மீது மட்டும் வழக்குப் பதிவு

அவிநாசி, மே 3-அவிநாசி, சேவூர் அருகே குளம், குட்டைகளில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு லாரி மற்றும் பொக்லைன் உரிமையாளர் இருவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவிநாசி பகுதியில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று முறியாண்டம்பாளையம் குளப்பகுதியில் முறைகேடாக மண் அள்ளிய 4 டிப்பர் லாரி, மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பிடித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம் உரிமையாளர் இருவர் மீது வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் வியாழனன்று சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மண் திருட்டில் ஈடுபட்ட முறியாண்டம்பாளையம் ஊராட்சி செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாகன உரிமையாளர் சின்னச்சாமி, செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் திருப்பூர் கனிம வளத்துறையினர் சேவூர், தண்ணீர்பந்தல் பாளையம், போத்தம் பாளையம் பகுதிகளில் மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் உள்ளது. இந்த டிப்பர் லாரி உரிமையாளர் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.