சிஐடியு மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 24- சிஐடியு புறநகர் மாவட்ட 2-வது மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் புதனன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் தலைவராக தங்கவேல், செயலாளராக சிவராஜ், பொருளாளராக சம்பத் உள்பட 40 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.
திருச்சியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி, மே 24- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் ஸ்ரீரங்கம் கோட்டம் 4வது வார்டு திருவானைக்காவல் சன்னதி தெருவில் உள்ள ஆறுநாட்டு வெள்ளாளர் சங்க கட்டிடம், அரியமங்கலம் கோட்டம் 64வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பகவதிபுரம், திருவெறும்பூர். பொன்மலை கோட்டம், 35 வது வார்டு, அகதிகள் முகாம் கொட்டப்பட்டு. கோ.அபிசேகபுரம் கோட்டம், 40வது வார்டு மாநகராட்சிப் பள்ளி, எடமலைப்பட்டிபுதூர் பிராட்டியூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முகாமில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இ.சி.ஜி., பல் சிகிச்சை என மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நகை, பணம் கொள்ளை
பொன்னமராவதி, மே 24- பொன்னமராவதி அருகே சிவகங்கை மாவட்டம் பரியாமருதிபட்டியில் பழங்கால சேவுகமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு வியாழன் இரவு புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணம், நகை ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் நெற்குப்பை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அறநிலையத் துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.