tamilnadu

img

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் பிரச்சாரக் கருத்தரங்கு

திருவாரூர்: வரும் ஜனவரி 8 ஆம் தேதியன்று பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி திரு வாரூரில் சனிக்கிழமையன்று மாலை சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஃப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கம் நடைபெற்றது.  44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக் கூடாது. ரயில்வே, பாது காப்புத் துறை, மின்துறை நிறுவனங்களை பிரிக்கக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி டிச.16, 17, 18 ஆகிய தேதிகளில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் செய்வது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனைகள் ஆகிய இடங்களில் வாயில் கூட்டங்கள் நடத்துவது, மாவட்டத்தில் தொழிலாளர்கள். பொதுமக்கள் மத்தியில் வேலை நிறுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர்கள் இரா.மாலதி (சிஐடியு), ஜெ. குணசேகரன் (ஏஐடியுசி), வி.குருநாதன் (தொமுச), வ. அம்பிகாபதி (ஐஎன்டியுசி), ரெ. பாஸ்கர் (எச்எம்எஸ்) ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி. சந்திரகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.