tamilnadu

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க

பொதுமக்கள் கேள்வி

சீர்காழி, மே 22-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாகும். வருடந்தோறும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. மழை பொழிவு இல்லாததாலும், மேட்டூரிலிருந்து போதிய தண்ணீர் கிடைக்காமல் போனதாலும் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் படிப்படியாக உவர் நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மற்றும் ஆற்றின் கரையிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களும் என மொத்தம் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. கொள்ளிடம் கரையையொட்டி சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வந்த தோட்டப்பயிர்களையும் தொடர்ந்து பயிர் செய்ய முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்பு நீர் உட்புகுந்ததே இதற்கு காரணம்.நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறிவிட்டதால் ஆற்றின் கரையோர மற்றும் கடலோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றனர்.விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் ஆற்றின் குறுக்கே உரிய இடத்தில் தடுப்பணைக் கட்டினால் கடல் நீர் ஆற்றுக்குள் புகுவதை தடுக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் முடியும் என்ற நோக்கில் பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை தடுப்பணை கட்டும் பணி துவங்கவில்லை.கடந்த 2014-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கொள்ளிடம் அருகே சந்தப்படுகைக்கும் பெராம்பட்டுக்கும் இடையே ரூ.113 கோடியில் தடுப்பணை கட்டப் போவதாக அறிவித்து அந்த இடத்தையும் தேர்வு செய்தனர். பின்னர் தடுப்பணைக் கட்டும் முடிவு கைவிடப்பட்டது. அதே போல் கடந்த 2017-ம் ஆண்டும் தடுப்பணைக் கட்ட அதிகாரிகள் முடிவு செய்து அதே இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுவரை தடுப்பணைக் கட்ட எந்த முடிவும் எடுத்தாகவும் தெரியவில்லை. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் உடனடியாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.