திருச்சிராப்பள்ளி, ஜூன் 22- தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வரைவு ஆவணத்தை மத்திய அரசு தர வேண்டும். மொழி பெயர்ப்புக்கு பின் இந்த ஆவணத்தின் மீது விவாதம் நடத்தி கருத்து தெரிவிக்க ஆறு மாத கால அவகாசம் தர வேண்டும். சமூக நீதிக்கும், மாநிலங்களின் கல்வி உரிமைக்கும் எதிராக உள்ள தேசியக்கல்வி கொள்கை 2019-ன் வரைவினை புதுதில்லியில் ஜூன் 22-ல் நடைபெற உள்ள மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘புதிய கல்விக்கொள்கை 2019’ எதிர்ப்பு முழக்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெருவில் வெள்ளியன்று நடை பெற்ற நிகழ்ச்சிக்கு தமுஎகச மாநில துணை த்தலைவர் நந்தலாலா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் சிறப்புரையாற்றினார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சேதுபதி, திருக்குறள் கல்வி மையம் முருகானந்தம், தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு கழகம் பாட்டாளி, தமிழ் கலை இலக்கிய பேரவை ராஜாரகுநாதன், சோழமண்டல தமிழ் கூட்டமைப்பு சிவகுருநாதன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளன்அரசு உள்பட பலர் பேசினர். முன்னதாக தமுஎகச மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். முடிவில் மாநிலக் குழு உறுப்பினர் இளங்குமரன் நன்றி கூறினார்.
திருவாரூர்
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன் தலைமையேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.பகவான்ராஜ், மாவட்டப் பொருளாளர் மா.சண்முகம், அரசு ஊழியர், ஆசிரியர், சிஐடியு வாலிபர், மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.