மன்னார்குடி, மே 12-ரயில்வே தண்டவாள பராமரிப்பு பிரிவில் நான்காம்நிலை ஊழியர்கள் இல்லாததால்தான் திருவாரூர் காரைக்குடி பிரிவு ரயில் சேவை திட்டமிட்டபடி துவக்கப்படமுடியாமல் மேலும் காலதாமதமாகிறது. ரயில்வே வட்டார செய்திகளிலிருந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது மே முதல் வாரத்தில் துவங்க வேண்டிய திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை இன்னும் பலமாதங்கள் தாமதமாகலாம் எனத் தெரிகிறது. திருவாரூர் பட்டுக்கோட்டை ரயில் பாதை வேலைகள் 2018 இறுதியில் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. அதன் பின்னர் இதன் சோதனை ஓட்ட ஆய்வினை தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளர் 2019 துவக்கத்தில் முடித்தும் பின்னர் இறுதியாக பெங்களூர் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அதிவேக சோதனை ஆய்வும் மார்ச் மாதம் முடிவடைந்து பாதுகாப்பு குறித்த சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பயணிகள் ரயில் சேவை ஏப்ரல் கடைசியில் அல்லது மே துவக்கத்தில் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தண்டவாள பராமரிப்பு பிரிவில் நான்காம் நிலை ஊழியர்கள் இல்லாததால் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை இன்னும் பல மாதங்கள் தாமதம் ஆகும் என தெரிகிறது. அதாவது திருவாரூர் கரைக்குடி இடையில் 74 ரயில்வே கேட்கள் உள்ளன. இவைகளுக்கான கேட் கீப்பர்கள் இல்லை என்பது தான் தற்போதைய அதிர்ச்சி தரும் தகவலாகும்.தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட பொறியியல் துறையில் தண்டவாள பராமரிப்பு பிரிவில் மட்டும் 569 கடைநிலை ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவைகள் அனைத்தும் ரயில்வே கேட்களில் கேட் கீப்பர்களாக பணியாற்றக்கூடிய ஊழியர்களை உள்ளடக்கிய பணியிடங்களாகும். இந்த ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே திருவாரூர் காரைக்குடி இடையிலான 74 ரயில்வே கேட்களுக்கு கீப்பர்களை நியமிக்க முடியவில்லை. ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் பாதையை பிரித்துப் போட்டு ஆறு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் அகலப்பாதை வேலைகள் நடைபெற்றன. இப்போது அந்த வேலைகள் முடிவுற்று சோதனை ஓட்டங்களும் முடிவுற்று ஊழியர்கள் இல்லாததால் சேவை துவக்கப்படவில்லை.நடப்பு ஆண்டில் தென்னக ரயில்வேக்கு பல்வேறு துறைகளுக்காக 1650 கடைநிலை ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இன்னமும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருந்தால் திருச்சி கோட்டத்திற்கான சுமார் 300 ஊழியர்கள் பணியில் இணைந்திருக்கவும் இதன் மூலம் தண்டவாள பராமரிப்பிற்கான பொறியியல் பிரிவிற்கு மட்டும் சுமார் 100-க்கும் மேல் ஊழியர்கள் (கேட் கீப்பர்கள்) பணியில் இணைந்திருக்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கும். இது நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை காரணம் காட்டி ரயில்வே தப்பிக்க வழி தேடியது. ஆனால் தேர்தல் ஆணையம் ரயில் சேவை துவக்கப்படுவதற்கு தடையில்லை என அறிவித்து விட்டது. இப்போதுள்ள பிரச்சனை ஊழியர்கள் இல்லாதது தான். ஏற்கனவே திருச்சி கோட்டத்தில் மட்டும் 569 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 100 ஊழியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்காததால் எப்போது திருவாரூர் காரைக்குடி இடையே ரயில் ஓடும் என்பது திருச்சி கோட்ட நிர்வாகமும் மேல்மட்ட தென்னக ரயில்வே நிர்வாகமும் தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு எப்போது தீர்வு வரும் என திருச்சி கோட்ட ரயில்வே அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, எல்லாம் மேல்மட்டம் தான் அதாவது ரயில்வே அமைச்சகம் தான் என்றார். பணி நியமன ஆணை வழங்கிய பின் மருத்துவ பரிசோதனை நடைபெற்று 15 நாட்கள் பயிற்சியை பெற்று பணியில் உண்மையாக இணைவதற்கு இப்போதிலிருந்து எவ்வளவு காலம் ஆகும் என்று கூறிய அவரிடம் நாம் மேலும் கேட்டபோது, அவர் கூறிய பதில் அதிர்ச்சியளித்தது. இந்த மாதத்திற்குள் பணிநியமன ஆணைகள் அனுப்பப்பட்டாலும் கூட இந்த நடைமுறைகள் முடிந்து ரயில்வே நிலையத்திற்குள் ஊழியர்கள் நுழைய இரண்டு மாதங்களுக்கு மேலாகி விடும் என்றார். திருவாரூர் பட்டுக்கோட்டை இடையிலான ஸ்டேஷன் மாஸ்டர்கள் கமர்சியல் ஊழியர்கள் நியமனம் இன்னம் செய்யப்படவில்லை என்ற தகவலும் கிடைத்தது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மோடியின் ரயில்வே மேல் மட்டம் கன கச்சிதமாக செய்து முடித்துள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மட்டும் பி தரத்திலிருந்து ரயில்வே ஊழியரே இல்லாத காண்ட்ராக்ட் ரயில் நிலையமாக மாற்றி தனது மதவாத முகவிலாசத்தை வெளிச்சமிட்டு காட்டிவிட்டது. மொத்தத்தில் ரயில்வே நிர்வாகம் காரணமாக 142 கிமீ நீள திருவாரூர் – காரைக்குடி அகலப்பாதை மட்டும் ரயிலின் சக்கரங்களுக்காக காத்திருப்பிலேயே உள்ளது.-ந.நி