தலைமை ஆசிரியர் சங்க கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூரில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பக்கிரிசாமி வரவேற்றார். ராஜ், அருண்சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் ராஜூ வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாநில பொருளாளர் அன்பரசன் தாக்கல் செய்தார். மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.
மரம் அறுக்கும் இயந்திரம் குறைந்த வாடகையில் பெறலாம்
தஞ்சாவூர் ஜூலை.7- கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது நிலங்களில் முறிந்த, வேரோடு சாய்ந்த மரங்களை சிறு துண்டுகளாக அறுத்து விரைவில் அப்புறப்படுவதற்கு ஏதுவாக 300 கனரக வகை மரம் அறுக்கும் கருவிகள் அரசால் பெறப்பட்டுள்ளது. கனரக மரம் அறுக்கும் கருவி ஒன்றுக்கு மணிக்கு ரூ.85 மற்றும் 13 டிராக்டருடன் பொருத்தப்படக் கூடிய தென்னை மட்டை தூளாக்கும் கருவி ஒன்றுக்கு மணிக்கு ரூ.340 என குறைந்த வாடகைக்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தஞ்சாவூர் செயற்பொறியாளர் ஹெச்.என்.கான்(94433-98634), பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் வி.செல்வராசு(94431- 77595), கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் ஆர்.இரவீந்திரன்(99943- 01233) ஆகிய அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு கருவிகளை பயன்படுத்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10 ஆண்டுக்கு பின் புத்துயிர் பெற்ற மழை நீர் சேமிப்பு குட்டை
தஞ்சாவூர் ஜூலை.7- தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் ஒரு பகுதியாக சோழன் நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மழை நீர் சேகரிப்பு குட்டையை, மாநகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமை காலை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்களையும் அகற்றி சுத்தம் செய்தனர். இப்பணியை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் துவக்கி வைத்தார். மழை நீர் சேகரிப்பிற்காக இந்த குட்டை கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மேலும் கல்லணைக் கால்வாயிலிருந்து வரும் தண்ணீரையும் சேமிக்க முடியும். இந்த குட்டை மொத்தம் 17,635 சதுர அடி, 12 அடி உயரம் கொண்டது. இப்போது 10 ஆண்டுக்கு பிறகு தூய்மை செய்யப்பட்டு குளம் புத்துயிர் பெற்றுள்ளது. அத்துடன் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் வரும் நீர்வழி பாதையும் சரி செய்யப்பட்டு, கரையை சுற்றி மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன என மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் தெரிவித்தார்.