tamilnadu

img

திருச்சிராப்பள்ளி தொகுதியில் திருநாவுக்கரசர் அமோக வெற்றி

திருச்சிராப்பள்ளி, மே 23-திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 7,39,241 ஆண், 7,68,940 பெண் மற்றும் 148 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15,08,963 வாக்காளர் உள்ளனர்.இத்தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆனந்தராஜ், நாம் தமிழர் கட்சியில் வினோத் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.இந்நிலையில் வியாழனன்று காலை 7.45 மணி அளவில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சென்றனர். பிறகு மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீலை, தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு, முகவர்கள் முன்னிலையில் உடைத்தார்.சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டு எண்ணும் ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், நுண்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என 3 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மேஜையிலும் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து 30 நிமிடங்களுக்கு பிறகு மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கின. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. 

மாலை 4 மணி நிலவரப்படி 15வது சுற்றில்,

திருநாவுகரசர் (காங்) 4,59,923, இளங்கோவன்(தேமுதிக) 1,20,906, சாருபாலா தொண்டைமான்( அமமுக) 75,615, ஆனந்தராஜ்(மநீம) 33,953, வினோத் (நாம் தமிழர்) 47,699, நோட்டா 11,060 திருச்சி நாடாளுமன்றத்தின் வாக்கு எண்ணிக்கையின் 15-வது சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,39,017 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதன் மூலம் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. 

திருச்சி மேற்கு தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருந்த பாதுகாப்பு அறையில் விடியற்காலை கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவருமான சிவராசு நிருபர்களிடம் கூறும்போது: ஒவ்வொரு வாக்குபதிவு பாதுகாப்பு அறைக்கும் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு கண்காணிப்பு கேமராவிற்கு உள்ள டி.வி வயர் பழுதடைந்ததால் டிவி தெரியவில்லை. மாறாக கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என்று கூறுவது சரியில்லை. கண்காணிப்பு கேமரா செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது, டிவி தான் செயல்படவில்லை என்றார்.