tamilnadu

தஞ்சாவூர் ,கும்பகோணம்,மண்ணச்சநல்லூர் முக்கிய செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையங்களில்  ஜூலை 5-16 வரை கலந்தாய்வு

தஞ்சாவூர், ஜூலை 5- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு ஆகிய இடங்களிலுள்ள அரசு ஐடிஐ மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் தனியார் ஐடிஐ மற்றும் இதர தனியார் ஐடிஐ-களிலும் பயிற்சியாளர்களைச் சேர்ப்பதற்கான முதலாம் கலந்தாய்வு ஜூலை 5 (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை (ஞாயிறு நீங்கலாக) தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரவேண்டிய நாள், நேரம் போன்ற விவரங்கள் விண்ணப்பதாரரின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, கலந்தாய்வுக்குத் தவறாமல், விண்ணப்பதாரர்கள் வருகை தரவேண்டும். மேலும், குறுஞ்செய்தி வரப்பெறாத விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வுக்கு வரவேண்டிய நாள், நேரம் போன்ற விவரங்களை தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடியாகவோ அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அறிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அனைவரும் உரிய நாளில் தவறாது கலந்தாய்வில் பங்கேற்றுப் பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்துள்ளார். 

ஜூலை 13 கும்பகோணத்தில்  போக்குவரத்து கழக லோக் அதாலத்

தஞ்சாவூர், ஜூலை 5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு, ஜூலை 13-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாநில சட்டப்பணிகள் குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த லோக் அதாலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டு  பயனடையுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.  மேலும் இது தொடர்பாக கீழ்காணும் தொலைபேசி எண்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். கும்பகோணம் மண்டலம்: 0435-2403724, 9043238312, 8667590214,  திருச்சி மண்டலம்: 0431-2415551, 9487898057, காரைக்குடி மண்டலம்: 04565- 234125, 04565-234126, 9487898095, 6379497617, புதுக்கோட்டை  மண்டலம்: 04322-266111, 9443576675, 7826852376.

பள்ளி மேலாண்மைக் குழு  கூட்டத்தில் நூல்கள் வழங்கல் 

மண்ணச்சநல்லூர், ஜூலை 5- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குன்னாக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.உமா தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் சி.லோகேஸ்வரி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கு.கனகராஜ் மற்றும் மேலாண்மை குழு தலைவர் எஸ்.வனிதா, துணைத்தலைவர் டி.சுமதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் முசிறி டாக்டர் க.நடராஜன், பள்ளி நூலகத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை புரவலர் ச.முருகேசனிடம் ஒப்படைத்தார். பள்ளி ஆசிரியர் பா.சுகந்தமாலினி நன்றி கூறினார்.

பெட்ரோல் பங்கில் தொடர் கொள்ளை : 3 இளைஞர்கள் கைது

கும்பகோணம், ஜூலை 5- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்க்கெட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு வேலை பார்த்து வந்த கேஷியரிடம் காரில் வந்த கொள்ளையர்கள் ரூ.15 லட்சத்தை பறித்து சென்றனர். அதேபோல வியாழனன்று அதே பெட்ரோல் பங்கில் கும்பகோணம் பாரதியார் தெருவைச் சேர்ந்த மோகன்(22) என்பவர் வேலை பார்த்து வந்தார். அதிகாலை சுமார் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், மோகனிடம் ரூ.100 கொடுத்து பெட்ரோல் போடுமாறு கூறினர். மோகன் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு இருந்தபோது, திடீரென மூன்று பேரும் மேஜையின் காசுப்பெட்டியில் இருந்து ரூ.2.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் தனது உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.2.50 லட்சத்தை திருடிச்சென்றது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20), பிரகாஷ்(20), அரவிந்த்(20) என்பது தெரிய வந்தது. பதுங்கி இருந்த மூன்று பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.