அரசியல் பயிற்சி முகாம்
தஞ்சாவூர், மே 15-தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம்,கோனூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு கிளைச் செயலாளர் பி.சுந்தரவேல் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ‘அரசு நலத்திட்டங்கள்’ என்ற தலைப்பில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு, ‘100 நாள் வேலை திட்டம்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ‘மார்க்சியம் அறிவோம்’ என்ற தலைப்பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் ஆகியோர் கருத்துரையாற்றினர். இப்பயிற்சி வகுப்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
மயிலாடுதுறை, மே 15 -மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளார். பருவத்தேர்வு முடிவுகளை www.avccollege.net என்ற இணையதள முகவரியிலும் காணலாம். மேலும் பருவத் துணைத் தேர்வுகளுக்கு (ஜூன்-2019) விண்ணப்பிக்க கடைசி நாள் 13.06.2019.
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், மே 15 -தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்து பேசினார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ் வாக்கு எண்ணிக்கை பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதில், வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப் பெட்டிகளை கையாளுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது ரகசியம் காக்க வேண்டும். வெளி நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. கண்ணியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். விதி மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 34 பேர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
மணல் திருட்டு : லாரி பறிமுதல்
தஞ்சாவூர், மே 15-புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (22). இவரும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சீனிச்சாமி என்பவரும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கறம்பக்குடியில் இருந்து மணலை திருடி, டிப்பர் லாரி மூலம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலகோட்டை கிராமத்திற்கு தனிநபர் ஒருவரின் கட்டுமான பணிக்கு ஏற்றி சென்றுள்ளனர்.இது குறித்து ஒரத்தநாடு டிஎஸ்பி காமராஜூக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் லாரியை பிடித்து சோதனை செய்ததில், மணல் ஏற்றி வந்தது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் சோதனை செய்த போது லாரி ஓட்டுநர் சீனிச்சாமி அங்கிருந்து தப்பி ஓடினார். லாரியில் பதுங்கி இருந்த லாரி உரிமையாளர் ஸ்டீபன் ராஜாவை கைது செய்ததோடு, லாரியை பறிமுதல் செய்தனர்.
அரசு பஸ் மீது வேன் மோதி விபத்து
திருச்சிராப்பள்ளி, மே 15-புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(45). இவர் பெரம்பலூரில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு புதனன்று காலை சரக்கு வேனில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5 மணியளவில் திருச்சி துவாக்குடி பேருந்து நிலையம் அருகே வேன் வந்தபோது, ஓட்டுநர் கண் அயர்ந்ததால் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜாகீர்உசேன் இடிபாடுகளிடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த துவாக்குடி போலீசார், நவல்பட்டு மற்றும் பெல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஜாகீர் உசேனை மீட்டனர். இந்த விபத்தில் சிறுகாயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதரவற்ற பெண்களுக்கு அரிசி வழங்கல்
தஞ்சாவூர், மே 15-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், அதிரை பைத்துல்மால் அமைப்பு சேவை திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி அந்த அமைப்பின் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ.அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்.இதில், ஆதரவற்ற அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 237 பெண் பயனாளிகளுக்கு, தொழில் அதிபர் அதிரை ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் தலா 5 கிலோ வீதம் மொத்தம் 1185 கிலோ அரிசி வழங்கினார். நிர்வாகிகள் இசட்.அப்துல்மாலிக், ஏ.முகமது முகைதீன், இ.வாப்பு மரைக்காயர், எம்.நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.