tamilnadu

img

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

தஞ்சாவூர், நவ.12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 80 சதவீதம் நெல் நடவுப் பணி முடிவுற்றுள்ளது. நெல் பயிருக்கு உரிய இடைவெளியில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் இடவேண்டியது அவசியம். இந்நிலையில் யூரியா போதிய அளவு இருப்பு உள்ளதா என்பதை அறிய தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி மற்றும் வேளாண்மை அலுவலர் எஸ்.இராணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மண்வள அட்டையில் வழங்கப்பட்டுள்ள உரப் பரிந்துரை முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் உரம் வாங்க செல்லும் பொழுது தங்களுக்கு வழங்கப்பட்ட மண்வள அட்டை மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். தனியார் உர விற்பனையாளர்கள் எவரேனும் அதிகபட்ச நிர்ணய விலையை தாண்டி உர விற்பனை செய்து வருவதாகவோ அல்லது யூரியா வாங்கினால் மேற்கொண்டு வேறு ஒரு நுண்ணூட்டத்தையோ அல்லது இதர உரங்களையோ வாங்க வேண்டும் என நிர்பந்தித்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார்.