tamilnadu

img

குத்தவக்கரை மயானத்திற்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

சீர்காழி ஆக2- கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து சுமார் 50 மீ தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் கொள்ளிடம் குத்தவக்கரை, மேலவல்லம், சாமியம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டும், அடக்கமும் செய்யப்படுகிறது. காலம் காலமாக போதிய சாலை வசதியில்லாமல் இருந்து வரும் இந்த மயானத்திற்கு ஆற்றங்கரையிலிருந்து இறந்தவர் உடலை சிரமத்துடன் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மயானத்திற்கு செல்லும் 50 மீ தூர மண் சாலை மழை பெய்தால் மிகவும் மோசமாகி நடக்கக் கூட முடியாமல் போய் விடுகிறது. மேலும் மண் சாலையின் குறுக்கே அடிக்கடி சீமைக் கருவேல முள் மரக்கன்றுகள் வளர்ந்து விடுவதால் அதனை அடிக்கடி அகற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்த களிமண் சாலையின் வழியே இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்வோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அமரர் ஊர்தியில் மயானம் வரை உடல்களை எடுத்துச் செல்ல முடியாததால் ஆற்றின் கரையிலிருந்து இறந்தவர் உடலை மயானத்திற்கு சிரமத்துடன் சுமந்தே செல்கின்றனர்.  எனவே குத்தவக்கரை மயானத்திற்கு செல்லும் 50 மீ தூர மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.