tamilnadu

தாண்டவன்குளம்- கூழையாறு சாலையை சீரமைக்க கோரிக்கை

சீர்காழி, மே 3-கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கூழையாறு செல்லும் கிராமச் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து இருவக்கொல்லை, மகாராஜபுரம், வேட்டங்குடி கேவரோடை, வாடி, வேம்படி ஆகிய கிராமங்கள் வழியாக கூழையாறு கடலோர கிராமத்துக்குச் செல்லும் கிராமச்சாலை தாண்டவன் குளத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அப்பகுதியில் அனுமதியின்றி கடத்தி வரும் சவுடு மண் குவாரிக்கு லாரிகள் அடிக்கடி சென்று மணல் ஏற்றிக் கொண்டு சட்ட விரோதமாக இக்கிராமச் சாலை வழியாக செல்கின்றன.மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சைக்கிள்களில் பள்ளி மாணவர்களும் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தாண்டவன்குளத்திலிருந்து கூழையாறு செல்லும் சாலையை மேம்படுத்தவும், அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

;