புதுக்கோட்டை, செப்.16- புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது. புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 46 குளங்கள் உள்ளன. நகராட்சியின் கட்டுப்பாட்டில் மட்டும் 36 குளங்கள் உள்ளன. நகராட்சியில் உள்ள குளங்கள், நீர்வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கிலி தொடராக அமைக்கப்பட்டிருந்த குளங்களுக்கான வரத்து வாரிகள் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதன் மூலம் நகரின் பிற பகுதிகளில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் நேரடியாக குளங்களுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதன் பயனாக மழைநீர் குளங்களில் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 2017-18 ஆம் நிதியாண்டில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியின் மூலம் தற்பொழுது நகராட்சியில் உள்ள காந்தி பூங்கா குளம், குமுந்தான் குளம், புதுஅரண்மனை குளம், மல்லான்குளம், இப்ராம்ஷா குளம், பழனியப்பா ஊரணி போன்ற பல்வேறு குளங்கள் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சியில் உள்ள குளங்களுக்கு வரும் 12 மழைநீர் வரத்து வாய்க்கால்கள் 6.50 கி.மீ நீளத்திற்கு முழுவதுமாக சிமென்ட் தரைத்தளமாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல் தங்குதடையின்றி குளங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.