தஞ்சாவூர், ஜூன் 5- சேதுபாவாசத்திரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும், ஊட்டச்சத்து பெட்டகம் காலாவதியானதாக புகார் எழுந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைவால், பிரசவத்தின் போது, குழந்தை இறந்தே பிறப்பது, தாய்- சேய் உயிரிழப்பு, எடை குறைவாக பிறப்பது, ஆரோக்கியமான வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவை நிகழ்கிறது. இதை தவிர்க்க தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்க 12-வது வாரத்தில் ஒரு முறை, 16-வது வாரத்தில் ஒரு முறை என இரண்டு முறை 500 கிராம் ஊட்டச்சத்து பவுடர்- 2 பாட்டில், இரும்பு சத்து டானிக்- 3 பாட்டில், 500 மில்லி நெய், 500 கிராம் பேரிச்சம்பழம்- 2 பாக்கெட், குடற்புழு நீக்க மாத்திரை- 1, பிளாஸ்டிக் டம்ளர்- 1, துண்டு- 1, பிளாஸ்டிக் கூடை நிறைந்த பெட்டகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக இப்பெட்டகம் வழங்கப்படவில்லை. மேலும். கர்ப்பிணிகளுக்கான தடுப்பு ஊசி, குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி போடுவதை அரசு நிறுத்தி வைத்தது. தற்போது, கர்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரைகள், தடுப்பு ஊசி, வழக்கமாக வழங்கப்படும் பெட்டகமும், கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகிறது. இதில் மாத்திரைகள், சத்து டானிக், பெட்டகத்தில் இருக்கும் பொருட்கள் காலாவதியானதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன் வழங்கப்பட்ட மாத்திரைகள் காலாவதியாக இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன், சேதுபாவாசத்திரம் வட்டாரம் அழகியநாகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட பெட்டகத்தில் இருந்த பேரீச்சம்பழம், ஆவின் நெய் காலாவதியாகி இருந்தன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்து அந்தப் பொருட்களை குப்பைில் வீசினர். இது குறித்து கர்ப்பிணிகள் கூறியதாவது; கொரோனாவால் வழங்கப்படாமல் இரண்டு மாதமாக இருந்த மாத்திரைகள், பெட்டங்களை தற்போது வழங்கி வருகிறார்கள். அதில் காலாவதியான பொருட்கள் உள்ளன. இன்னும் சில பகுதிகளில் பெட்டகம் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. பாமர மக்கள் இதை வாங்கி சாப்பிட்டால், தாய்க்கும், சிசுவுக்கும் ஆபத்தாக முடியாதா ? எனவே அரசு இவ்விசயத்தில் அலட்சியமாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.