சீர்காழி, மே 14-நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பாதியைச் சேர்ந்தஆறுமுகம்(48), கடவாசல் கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆலையிலிருந்து அரிசிமூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கொள்ளிடம் அருகே எருக்கூர் அரசு அரிசி ஆலைக்கு சென்ற போது சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதில் அரசூர் மின்சார வாரியத்தில் பணியை முடித்துக் கொண்டு சீர்காழி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த தென்பாதியைச் சேர்ந்த மின் ஊழியர் ராஜன் (42) என்பவர் மீது மின்கம்பம் விழுந்தது. அவருக்கு பலத்த காயம்ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர், சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.