tamilnadu

சாலையில் திரிந்த மாடு முட்டி ஒருவர் படுகாயம்

கும்பகோணம், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் அருகே உள்ள வியாகசாகர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் செவ்வாய்க்கிழமை மாலை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, சாலையில் மேய்ந்து வந்த கோவில் மாடு வெங்கடேசனை முட்டியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது.  அருகில் இருந்த சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க ஓட்டு நர்கள் காயமடைந்த வெங்கடேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் தலையில் படுகாயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர ஆட்டோ சங்க தலைவர் சாமிநாதன் கூறுகையில், கோவில் மாடுகள் சாலைகளில் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளன. அண்மையில் பணியில் இருந்த காவலர் ஒருவரை முட்டி காயம் ஏற்படுத்தியது. இது தொடர்வதால், மகாமக குளம், உச்சிப்பிள்ளையார் கோவில் பெரிய கடைத்தெரு, கும்பேஸ்வரர் கோவில் போன்ற நகரப் பகுதியில் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக் கோரி வர்த்தக சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் நவம்பர் 9 ஆம் தேதி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.