tamilnadu

சிபிஎம் ஒன்றியச் செயலாளருக்கு கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார்

 திருச்சிராப்பள்ளி, மே 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத் மணி செயல்பட்டு வருகிறார். இவர் அந்தநல்லூர் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடிய பிரச்சினைகளான சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி ரேஷன் கடை பிரச்சனை மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக அதிகாரிகளை சந்திப்பது, நிறைவேறாத கோரிக்கைகளுக்கு மக்களை திரட்டி போராடுவது என ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் 27.5.2020 அன்று வினோத் மணியின் கைப்பேசிக்கு அந்தநல்லூரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளில் திட்டி, தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய் உன்னை வீடு புகுந்து வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் மே 28-ல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் மக்களை திரட்டி போராடுகின்ற வினோத் மணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வன்மையாக கண்டனத்திற்குரியது. எனவே காவல்துறையினர் சட்டப்படி ராஜ்மோகன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு வினோத் மணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;