சீர்காழி: நுண்ணுயிர் பாசன கருவிகளை 100 சதவிகித மானியத்தில் பெற்றுக் கொள்ள வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து நாகை மாவட்டம் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையா கூறியதாவது, கொள்ளிடம் வட்டாரத்தில் பல பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நெல், உளுந்து, பயறு நிலக்கடலை, பருத்தி பாமாயில், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் உளுந்து, பயறு, பாமாயில், கரும்பு, எள் போன்ற பயிர்களுக்கு தரப்படுகிறது. இதர பெரும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் மேற்கண்ட அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளைப் பின்பற்றுவதால், 25 சதவிகிதம் வரை நீர் வீணாவதைத் தவிர்க்க முடியும். நீரை சேமித்து தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். இதனைப் பெறுவதற்கு உடனடியாக தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை நேரில் சந்தித்து சிறு குறு விவாசாயிகள் சான்று, ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வி.ஏ.ஓ சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், மின் இணைப்புக்கான சான்று ஆகியவைகளுடன் தொடர்பு கொண்டு ஒரு எக்டேருக்கு ஒரு லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனமும் மற்றும் ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள தெளிப்பு நீர் கருவிகளையும் 100 சதவிகித மானியத்தில் பெற்று பயனடையலாம் என்றார்.