திருச்சிராப்பள்ளி: மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கட்டிட உரிமையாளர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழனன்று மாலை வீராம்பாளையம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்பு, சிபிஎம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் செல்வராசு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் பேசினர். கிளை செயலாளர்கள் ராஜா, பெரியசாமி, மனோகர், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லையன் நன்றி கூறினார்.