tamilnadu

கோவில்பட்டி ,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக்கில்  மே 27ல் கலந்தாய்வு தொடக்கம்

கோவில்பட்டி , மே 23-எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2019-20ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு மே 27,  29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் பேபி லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள், வருகிற 27ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள கலந்தாய்வில் பிளஸ் 2 தேர்வில் 345 முதல் 514 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களும், பிற்பகல் 1 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் 246 முதல் 344 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.2019-20ஆம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் வருகிற 29ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள கலந்தாய்வில்,  10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 350 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும், பிற்பகல் 1 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் 280 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும், 30ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் 195 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வு கடிதம் கிடைக்காதவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் .

விளாத்திகுளம்தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வெற்றி

தூத்துக்குடி,மே 23விளாத்திகுளம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 28960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார் .மொத்தம் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளர் ஜெயகுமாரைவிட 28960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி சுற்று முடிவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் 
சின்னப்பன் (அதிமுக) -70002
ஜெயகுமார் (திமுக) - 41042
மார்க்கண்டேயன் (சுயேச்சை) -  27331
ஜோதிமணி (அ.ம.மு.க) - 9619
 

குலவணிகர்புரம்-ஜோதிபுரம் சாலை  விரிவாக்கப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி, மே 23-நெல்லை  குலவணிகர்புரம் முதல் ஜோதிபுரம் வரை திருவனந்தபுரம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை  பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம்  முதல் கொங்கந்தான்பாறை விலக்கு வரையிலான சாலை இருவழிப்பாதையாக உள்ளது. நான்குவழிச் சாலையில் இருந்து மாநகர பகுதிக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள்,  நான்குசக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இந்தச் சாலை வழியாகவே வர வேண்டியுள்ளது. இந்த சாலையில் நெருக்கடி ஏற்பட்டதால் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  அதன்படி குலவணிகர்புரம்-ஜோதிபுரம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதற்காக பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலையின் இருபுறமும் மண் குவித்து ஜல்லி போடப்பட்டு வருகிறது. பணிகளை இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கும் வகையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.