தஞ்சாவூர், ஆக.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த கொரட்டூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் நீலகண்டன் 51, இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது, கடந்த 2018 ஆம் ஆண்டு டிச 28 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், ஆய்வாளர் நீலகண்டன் வைத்திருந்த பேக், அவரது மேஜை டிராயர் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் வைத்திருந்த பேக் உட்பட, இதர பகுதிகளில் திடீர் ஆய்வு செய்த போது, கணக்கில் வராத 1.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து நீலகண்டன் மண்டபம் முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் காலை 7 மணியவில் ஆய்வாளர் நீலகண்டன் சொந்த ஊரான கொரட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்தது. இதையடுத்து தஞ்சை கருப்ஸ் நகரில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலிருந்து, கொரட்டூர் வீட்டு சாவியை அவரது மனைவி கொடுத்து அனுப்பியுள்ளார். பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வீட்டிற்குள் சென்று 11.30 மணி வரை சோதனை நடத்தினர். இதை போல லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் காலை 10 மணி முதல் 1 மணி வரை ஆய்வு நடத்தினர். வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக செல்லப்படுகிறது.