tamilnadu

img

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம், அபுதாபி உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம் வந்தது.

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், வழக்கம் போல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எந்த வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமல் 2,291 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.