tamilnadu

img

தீக்கதிர் முன்னாள் செய்தியாளர் தோழர் டி.நடராஜன் காலமானார்

தீக்கதிர் முன்னாள் செய்தியாளர் தோழர் டி.நடராஜன் காலமானார்

தீக்கதிர் நாளிதழின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் நிருபர் தோழர் டி.நடராஜன்(87) உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை காலமானார். தீக்கதிர் நாளிதழின் புதுக்கோட்டை மாவட்ட நிருபராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர் தோழர் டி. நடராஜன்(87). அகில இந்திய வானொலியிலும், தினகரன் நாளிதழிலும் நிருபராக பணியாற்றியுள்ளார். தற்போது கரூரில் அவரது மகன் இல்லத்தில் வசித்து வந்த தோழர் டி.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக திங்கட்கிழமை காலமானார். அவருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், துரை நாராயணன், கரூர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, எஸ்‌.பி. ஜீவானந்தம், எம்.சுப்பிரமணியன், ப.சரவணன், புதுக்கோட்டை மாவட்டக் குழு உறுப்பினர் சி. அன்புமணவாளன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ. ரகுமான், தீக்கதிர் நாளிதழ் கரூர் மாவட்ட செய்தியாளர் சி. செல்லதுரை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  அவரது மறைவுக்கு, முன்னாள் தீக்கதிர் பொதுமேலாளர் எஸ்.ஏ. பெருமாள், செய்தி ஆசிரியர் ப. முருகன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தோழர் டி.என்.நடராஜனுக்கு செவ்வணக்கம் தோழர் டி.என். நடராஜன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரும், மாவட்டக் குழு உறுப்பினரும், தீக்கதிர் முன்னாள் நிருபருமான புதுக்கோட்டை நகர நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் நகரத்தின் தந்தை என அழைக்கப்பட்ட தோழர் டி.என்.நடராஜன் திங்களன்று உடல் நலக்குறைவால்  கரூரில் இயற்கை எய்தினார்.  அன்புத் தோழர் டி.என் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  தோழர் டி.என். கட்சிப் பொறுப்புகளில் இருந்த காலத்தில், புதுக்கோட்டை நகரத்தில் ஒரு மாபெரும் செங்கொடி இயக்கத்தை கட்டுவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு தனித்தன்மையோடு புதுக்கோட்டை நகரத்தில் அடையாளப்படுத்தியதில் அவரது பங்கு மகத்தானது.  புதுக்கோட்டை நகரத்திற்கும், மாவட்ட முழுவதும் கட்சிப் பணியாற்றுவதற்காகவும் நமது மதிப்பிற்குரிய மாநிலத் தலைவர்கள் தோழர்கள் ஏ.நல்லசிவன், என்.சங்கரய்யா, என்.வரதராஜன் மற்றும் டி.கே.ரங்கராஜன் போன்ற தலைவர்கள் வந்தால், அவர்கள் கட்சி நிகழ்ச்சி முடிந்து  சென்னை திரும்பும் வரை அவர்களுக்கு அரணாக நின்று வழி அனுப்பக்கூடிய பொறுப்பு மிக்க தோழர். புதுக்கோட்டை நகரத்தில் தீக்கதிர் நாளேட்டை மிக உற்சாகமாக உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களிடம் கொண்டு செல்வதில் சிறப்பாக செயல்பட்டவர். கூட்டுறவு அச்சகத்தில் பணியாற்றிய போது அங்கு சிஐடியு சங்கத்தின் பொறுப்பாளராக, சிஐடியு மாவட்டத் தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றியவர். தோழர் டி.என்.நடராஜனுக்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.