தஞ்சாவூர் செப்.16- தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக கண்காட்சி இந்நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் வி.சுப்ரமணியனின் 117-வது பிறந்த நாளை யொட்டி ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பாஸ்தா, சேமியா, நூடுல்ஸ், குக்கீஸ், சிறுதானிய படலம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை, தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.வேலுசாமி, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் சி.அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தொடக்க நாள் விழாவினையொட்டி அமைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் கண்காட்சியையும், விவசாயப் பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த செயல் விளக்கத்தையும் பார்வையிட்டனர். மேலும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அமைத்திருந்த அறிவியல் கண்காட்சியையும் பார்வையிட்டு பாராட்டினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு செயல் விளக்க மற்றும் கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. சிறுதானிய ஐஸ் கிரீம், சிறுதானிய பாப் கார்ன், பழச்சாறுகள் மற்றும் குக்கீஸ் மாதிரிகள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கண்காட்சி இரண்டாம் நாளாக திங்கள்கிழமையன்றும் நடைபெற்றது.