tamilnadu

img

பழுதடைந்த கட்டடத்தில் எருக்கூர் சுகாதார நிலையம்

சீர்காழி, ஜூன் 14- கொள்ளிடம் அருகே பழுதடைந்த எருக்கூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த நிலையத்தில் காலை முதல் மாலை வரை ஒரு கிராம செவிலியர் பணிபுரிந்து வருகிறார். இந்த சுகாதார நிலையத்திற்கு 10-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு ஏறத்தாழ 50 முதல் 70 பேர் வரை இங்கு வந்து பயனடைந்து வருகின்றனர்.  ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழமையான கட்டிடமாக உள்ளதால் கட்டிடத்தின் பலம் குன்றி காணப்படுகிறது. மழை பெய்தால் மேற்கூரயின் உள்பகுதியிலிருந்து நீர் உள்ளே கசிந்து வருகிறது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சுற்றுச்சுவர் அமைக்கப்படாத்தால் இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் வந்து குடித்துவிட்டு மது பாட்டில்களை உடைத்து, ஆரம்ப சுகாதாரநிலையம் கட்டிடத்தின் உள்பகுதியிலேயே போட்டு விடுகின்றனர். இதனால் இங்கு வரும் நோயாளிகளும் செவிலியர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி எருக்கூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலு மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.