tamilnadu

img

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சிபிஎம், பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. முதல் கீழ கல்கண்டார்கோட்டை வரை சாலை அமைக்கும் பணியில் உள்ள முறைகேடுகளை சீர்செய்ய வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை அமைக்க வேண்டும். மேலகல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் இருந்து கீழகல்கண்டார்கோட்டை ஆற்றுப்பாலம் வரை தார்ச்சாலை விரிவாக்க பணியில் பாரபட்சம் காட்ட கூடாது. தார்ச்சாலை, சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டி ஏழை வீடுகளை இடித்தும் பணக்காரர்கள் வீட்டில் லஞ்சம் பெற்று சாலை விரிவாக்க பணியில் முறைகேடுகளில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடியும் வரை கீழகண்டார்கோட்டைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று மேலகல்கண்டார்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், பகுதிக்குழு உறுப்பினர் சீனிவாசன், வாலிபர் சங்க பகுதி தலைவர் விஜயேந்திரன், பகுதி செயலாளர் பாலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாதர் சங்க புவனேஸ்வரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, முத்துக்குமார், பாலமுருகன், கிளைச் செயலாளர்கள் ஜெயந்தி, கணேசன், சேகர், டிஆர்இயு மகேந்திரன், ராஜா, கவியரசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவலறிந்து அங்கு வந்த பொன்மலை காவல் நிலைய உதவி ஆணையர் பாலமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், பேருந்துகளை உடனே கீழகல்கண்டார்கோட்டை வழியாக இயக்குவது, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் வியாழனன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது, அதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என முடிவானது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.