தஞ்சாவூர் ஜூன்.23- தஞ்சாவூர் ஆட்சியர் கூட்டரங்கில் இ-அடங்கல் குறித்த பயிற்சி வகுப்பு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு வட்டங்களைச் சேர்ந்த 131 அலுவலர், பூதலூர், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த 190 அலுவலர், கும்பகோணம், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 218 அலுவலர், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 115 அலுவலர், பேராவூரணி, திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 146 அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாக கணினி மயமாக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு அடங்கல்கள் வழங்குவதில் காலதாமதமின்றி, தவறுகள் ஏற்படாமல் நிலத்தின் சாகுபடி செய்த விபரம் உள்ளிட்ட முழுமையான தகவல்களும் தமிழக அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விபரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று இது குறித்து விபரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.