tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிபிஎம் பிரச்சாரப் பயணம்

நாகப்பட்டினம், ஜூன் 9- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டம் முழுவதும் கட்சியின் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெ.சண்முகம் பிரச்சார இயக்கத்தைத் துவக்கி வைத்தார். மநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தலைஞாயிறு ஒன்றியம் சார்பில், வெள்ளப்பள்ளம் கடைத்தெரு பிரச்சார இயக்கம் ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமையில் நடைபெற்றது. இதனை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினர். நாகைமாலி, வி.மாரிமுத்து, ஏ.வி.முருகையன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். கே.அலெக்சாண்டர், என்.முருகையன், எம்.ஆறுமுகம், ஜி.செல்வராஜ், ஆ.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கோயில்பத்து, மணக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்று, கொளப்பாட்டில் நிறைவு பெற்றது. ஆய்மூரில் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். கொளப்பாட்டில் ஏ.வி.முருகையன் சிறப்புரையாற்றிட, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து நிறைவுரையாற்றினார்.

வேதாரணியம்

வேதாரணியம் ஒன்றியம் சார்பில் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமையில் பிரச்சார இயக்கம், குரவப்பு லத்தில் துவங்கியது. கோவை.சுப்பிரமணியன் துவக்கவுரை யாற்றினார். தோப்புத்துறையில் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஏ.வி.முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆறுமுச்சந்திப்பு, பெரியகுந்தகை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்று கரியாப்பட்டினத்தில் நிறைவு பெற்றது. எஸ்.புஷ்பராஜ், எஸ்.கே.பாண்டியன், எஸ்.முத்துராமன், பி.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாகை நகரம், ஒன்றியம் சார்பில் பிரச்சார இயக்கம் ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமையில் நடைபெற்றது. முட்டத்தில்  நகரச் செயலாளர் எம்.பெரியசாமி துவக்கி வைத்தார். பெருங்கடம்பனூர் என பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆழியூரில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், நாகைமாலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிக்கல் கடைத்தெருவில் பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் நிறைவுரையாற்றினார். மாவட்ட க்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், ப.சுபாஷ்சந்திரபோஸ், சு.சிவகுமார், சு.மணி, எஸ்.என்.ஜீவாராமன், என்.வடிவேல், மாரிமுத்து, ஏ.கே.குமார் பங்கேற்றனர்.

சீர்காழி

சீர்காழியில் கட்சியின் வட்டச் செயலாளர் வி.எஸ்.தமிழ்வேந்தன் தலைமையில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். வட்டகுழு உறுப்பினர்கள் கே.நாகையா,  சி.ராஜேந்திரன், கே.கேசவன், ஆர்.நீலமேகம், பி.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 30 இருசக்கர வாகனங்களில் கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். பிரச்சாரம் சீர்காழியில் தொடங்கி திருவாலி, திருநகரி, மங்கைமடம், திருவன்காடு, நாங்கூர், செம்பதணெருப்பு, பாகசாலை, வழியாக சென்று வைதீஸ்வரண்கோயிலில் நிறைவடைந்தது. நாகை மாவட்டம் ஆக்கூரில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் ஞாயிறன்று காலை கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் துவங்கியது.  தரங்கம்பாடி வட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், ஏ.ரவிச்சந்திரன், முன்னாள் வட்ட செயலாளர் டி.கோவிந்தசாமி, வட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், மார்க்ஸ், பஷீர்அகமது உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆக்கூர் முக்கூட்டு, திருக்கடையூர், டி.மணல்மேடு, காட்டுச்சேரி, தில்லையாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பயணக் குழுவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னை சாலையில் உள்ள தோழர் பி.சீனிவாசராவ் சிலையிலிருந்து இப்பிரச்சார பேரணி துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். பேரணியை மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியன், பி.எஸ்.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி நகர 24 வார்டுகளிலும் பேரணி சென்று நிறைவாக இரவு 8 மணியளவில் காமராஜர் சிலையில் வி.ச மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன்  நிறைவுரையாற்றினார்.  நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, கு.வேதரெத்தினம், ஏ.கே.செல்வம், எம்.ஜெயபிரகாஷ், எஸ்.தண்டபாணி, வாலிபர் சங்க நகர செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர், தலைவர் மதன்சிங் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் 25 வாகனத்தில் கலந்து கொண்டனர். 

மன்னார்குடி

மன்னார்குடி நகரக்குழுவின் சார்பில் இரண்டாம் நாள் பிரச்சாரம் சனிக்கிழமை நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மன்னார்குடி கீழப்பாலத்தில் துவங்கிய பிரச்சாரத்தில் நகரக்குழு உறுப்பினர்கள் ஜி.ரெகுபதி, பி.கலைச்செல்வி, ஜி.தாயுமானவன், சிஐடியு டி.ஜெகதீசன், ஏகாம்பரம், சிவசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், ம.கலைச்செல்வி, விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் மாரிமுத்து,   உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் பிரச்சார துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.  சேரன்குளம், வடபாதி, நெம்மேலி அதன் உள்கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. மாலை மன்னார்குடி முக்கிய வீதிகளின் வழியாக பந்தலடியை வந்தடைந்தவுடன் இரவு 7 மணி அளவில் பந்தலடியில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.  

அறந்தாங்கி 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசலில் ஞாயிறு காலை மாவட்ட செயலாளர் எஸ்கவிவர்மன் தலைமையில் பிரச்சாரம் துவங்கி செய்யானம் மூவனூர், பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக முதல் நாள் பிரச்சாரம்  சுப்பிரமணியபுரத்தில் நிறைவு பெற்றது. கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுப்பிரமணியன் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் சிபிஎம் ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ் மனமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு.இராமநாதன் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா ஆகியோர் பிரச்சாரத்தில் பேசினர். மாதர், வாலிபர் சங்கத்தினர் திரளானோர் பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டையில் இருந்தும் தெற்கு எல்லையான மணமேல்குடியில் இருந்து இருசக்கர வாகன பிரச்சார இயக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை பிரச்சார பயணத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன்ன் தலைமை வகித்தார். பிரச்சார பயணத்தை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்பொன்னுச்சாமி உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.உடையப்பன் வி.துரைச்சந்திரன் ஏ.ஸ்ரீதர். கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். நூற்றுககும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பிரச்சாரம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி மட்டங்கால், மோகனூர், பெரியகோட்டை, பல்லவராயன்பத்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கறம்பக்குடியை வந்தடைந்தது. பிரச்சாரம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  10-ம் தேதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக பிரச்சாரப் பயணம் ஆலங்குடி வந்தடைந்து அங்கு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பேராவூரணி 
தஞ்சை பேராவூரணி ஒன்றியத்தில் ஆவணம், பூவலூர், சீதாம்பாள்புரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களைச் சந்தித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சிபிஎம் பேராவூரணி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு முன்னிலை வகித்தார். ஆர்.மாணிக்கம், ரெங்கசாமி, கோவிந்தராசு உள்பட 20 இருசக்கர வாகனங்களில் வந்து பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டனர். 

ஒரத்தநாடு 

ஒரத்தநாடு ஒன்றியத்தில் கீழையூர், மண்டலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு கோவிந்தராஜ், ஒன்றியக்குழு மோகன்தாஸ், வி.துரைராஜ், வி.சிதம்பரம், காந்தி, ஜெய்சங்கர், நகரச்செயலாளர் வசந்தகுமார், ஆம்பலாப்பட்டு மாதவன், வெங்கடேசன் கலந்து கொண்டனர். 

பாபநாசம்

பாபநாசம் ஒன்றியத்தில் சரபோஜிராஜபுரம், சூலமங்கலம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன், நிர்வாகிகள் ஏ.ஆர்.சேக் அலாவுதீன், டி.சீனிவாசன், ஜி.சேகர், முரளிதரன், பாபநாசம் நகரச்செயலாளர் முகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.