tamilnadu

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி பாலியல் வழக்கில் குற்றவாளி கைது

அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா அகரம் கிராமத்தைச் சார்ந்த பெண்ணை அதே ஊரை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் என்பவர் வன்புணர்ச்சி செய்து, தலைமறைவாக இருந்தார். ஜனநாயக மாதர் சங்கமும் பெண்ணின் உறவினர்களும் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரினை ஏற்றுக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அன்றே வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குற்றவாளி செல்வராஜை தொடர்ந்து தேடி வந்தனர். செல்வராஜ் தலைமறைவாக இருப்ப தால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், நவம்பர்  மாதம் 23 ஆம் தேதி ஆண்டிமடம் கடைவீதியில் ஆண்டிமடம் பகுதி மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.பத்மாவதி, மாநில துணை செயலாளர் கீதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜன், துரைராஜ் உள்பட ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலர் சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் எம்.சின்ன துணையுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளி செல்வராஜை கைது செய்து விடுகிறோம்; தற்காலிகமாக போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சூழலில் வெள்ளிக்கிழமை செல்வராஜ் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் தானாக வந்து ஆஜராக, அவரை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செல்வராஜை காவலில் எடுத்து விசாரணை செய்யப் போவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.