tamilnadu

கொரோனா தொற்று அபாயம்: அரசு விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் கருணாநிதி, துணைத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலத்தில் 14-க்கும் மேற்பட்ட டெப்போக்களில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கடந்த ஜூன் 1ம் தேதியிலிருந்து இயக்கப்படுகின்றன. இயக்கப்படும் 50 சதவீதமான பேருந்துகளில் 60 சதவீதம் பயணிகளும், ஓட்டுநர், நடத்துனரும் முககவசம் அணிய வேண்டும் என்பதை பயணிகளிடம் சொல்லும் போது பயணிகளுக்கும், ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. மேலும், 60 சதவீதம் பயணிகள் என்பது மீறப்படுகிறது. வண்டி முழுவதும் முழுமையாக அடைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு விதியை அமல்படுத்த வேண்டிய  போக்குவரத்து நிர்வாகம் கலெக்சன் அதிகமாக இருக்க வேண்டும் என நிர்பந்திக்கிறது கலெக்சன் குறைவாக உள்ள ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறது.

நகரப் பேருந்தில் 26 பேரும், புறநகர் பேருந்தில் 33 பேரும் மட்டும் பயணிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளே ஆங்காங்கே பஸ் நிறுத்தங்களில் நின்று கொண்டு கூடுதல் பயணிகளை பஸ்ஸில் ஏற்றி விடுகிறார்கள். மேலும் 50 சதவீதம் பஸ்களை இயக்க தேவையில்லாமல் அனைத்து ஊழியர்களும் வேலைக்கு வர வேண்டுமென அலைகழிக்கிறது. இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு காலம் இருக்கும் பொழுது இரவுப் பணிக்கு ஊழியர்களை வரவழைக்கிறார்கள். எனவே, கொரோனா பரவாமல் தமிழக அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் திருச்சி மண்டல போக்குவரத்து நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு ஊழியர்களையும் அனைத்து ஊழியர்களையும்  வேலைக்கு வரச் சொல்வ தையும், இரவு பணிக்கு ஊழியர்களை வர வழைப்பதையும் நிறுத்த வேண்டும். வசூலை அதிகப்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதை நிறுத்த வேண்டும்.

அரசு அறிவித்த விதிமுறைகளின் படி பேருந்து களை இயக்கி, நோய் தொற்றிலிருந்து பொதுமக்களையும் போக்குவரத்து ஊழி யர்களையும் பாதுகாத்திடவும் தேவையான நடவடிக்கைகளை  எடுத்திட வேண்டும். தேவைப்படி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். என அந்த மனுவில் தெரிவித்தி ருந்தனர். ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் அசோகன், மாணிக்கம், குணசேகரன், மலைக்கோட்டை பாபு, ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதே போன்று அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளரிடமும் மனு கொடுக்கப்பட்டது.