tamilnadu

img

அரிமளத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூடுக!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 5- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒருகடை இந்தியன் வங்கி மற்றும் சர்ச் அருகிலும், இன்னொரு கடை அய்யனார்கோவில் அருகிலும்  இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளினால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், ஊரில் உள்ள கண்மாயையும், வயல்வெளியையும் குடிமகன்கள் திறந்தவெளி மதுக்கூடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் பெரும் தீங்கு விளைவிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் ‘மதுவிலக்கு மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி மேற்படி மதுக்கடைகள் இரண்டையும் அகற்ற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக வெள்ளிக்கிழமையன்று மதுக்கடைகளை அகற்றக்கோரி மனுக்கொடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மதுவிலக்கு மக்கள் இயக்கத் தலைவர் எஸ்.கீதா, செயலாளர் ப.சுமதி மற்றும் நிர்வாகிகள் ஆர்.சங்கீதா, ஆர்.செல்வி, எஸ்.ரம்யா, எம்.சித்ரா உள்ளிட்டோர் வந்தனர்.

இவர்களுக்கு ஆதவராக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலாளர் முருகன் உள்ளிட்டோரும் உடன் வந்தனர். ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று மதுவுக்கு எதிராகவும், கடைகளை அகற்றக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழப்பினர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் கோரிக்கைகளை எழுப்பினால் கைது செய்வோம் என மிரட்டினர். மதுவினால் தங்கள் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விளக்கி போராட்டக்காரர்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  போலீசார் பின்வாங்கினர். பின்னர்  மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்களிடம் பெற்ற 5 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதி அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரணவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திக்குமார் ஆகியோரிடம் வழங்கி கோரிக்கைளை வலியுறுத்தினார்.

இதுகுறித்து போராட்டத்திற்கு தலைமைவகித்த ப.சுமதி செய்தியாளர்களிடம் கூறும்போது, டாஸ்மாக் கடைகளினால் எங்கள் ஊர் மக்கள் கடுமையா சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் நடத்திய ஒரு ஆய்வில் எங்கள் கிராமத்தில் உள்ள விதவைகளில் 90 சதவிகிதத்தினர் குடிப்பழக்கத்தினாலேயே தங்கள் கணவர்களை இழந்துள்ளது தெரிய வந்தது. அரசு நிவாரணமாகக் கொடுத்த ரேசன் அரிசியைக்கூட விற்று குடிக்கும் அளவுக்கு அவர்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் அம்மா மனநிலை சரியில்லாதவராக உள்ளார். பள்ளி மாணவிகளகாக உள்ள இரண்டு பெண்பிள்ளைகளும் கூலிவேலைக்குச் செல்கின்றனர். அந்த கூலியைக்கூட பறித்துக்கொண்டு அவர்களின் தந்தை டாஸ்மாக் கடைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது. இதனால்தான் எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.