சீர்காழி ஜூலை 13- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்திற்கு சொந்தமான புல்டோசர் எந்திரம் சாலை பணிக்காக இருந்தது. இதற்கென ஒரு டிரைவரும் பணியில் அமர்த்தப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த எந்திரம் பணி முடிந்தவுடன் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும். சாலையமைக்கும் பணி நடைபெறும் பொழுதெல்லாம் பயன்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 5 வருடத்திற்கு மேலாக புல்டோசர் எந்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காணப்படவில்லை. இந்நிலையில் எந்த பயனுமின்றியும், தற்போது இயக்க முடியாத நிலையிலும், கொள்ளிடம் அருகே நல்லவிநாயகபுரம் கிராமத்தில் சாலையோரம் மண்ணில் புதைந்த நிலையில் கேட்பாரற்று இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த எந்திரம் ஒரே இடத்தில் 5 வருடத்திற்கும் மேலாக கிடக்கிறது. எனவே கிராமச் சாலையோரம் மண்ணில் புதைந்த நிலையில் கிடக்கும் புல்டோசர் எந்திரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.