திருச்சியில் விளம்பர பேனரை வைக்க முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேனகா நகர் பகுதியில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளது. அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை ஒட்டி பிரம்மாண்ட விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக நேற்று இரவு இந்த பேனர் சரிந்து கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து கீழே விழுந்து கிடந்த அந்த விளம்பர பேனரை, மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில் 3 பேர் இன்று காலை ஈடுபட்டனர். அப்போது அந்த பேனர் அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதில் லால்குடியை சேர்ந்த செல்லதுரை (54) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாத்தலையை சேர்ந்த சேட்டு என்பவர் திருவானைக்காவல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.