tamilnadu

img

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

2004-ம் ஆண்டு டிசம்பர் 26... அது ஒரு கருப்பு ஞாயிற்றுக்கிழமை…காலை 9.15 மணி…ஆழிப்பேரலை, நாகப்பட்டினம் மாவட்டத்தைப் புரட்டிப் போட்டது. கடற்கரைக் கிராமங்களின் மீனவ மக்கள், நாடோடிகளாகத் திரிந்த வீடில்லா மக்கள்என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்நாகை மாவட்டம் முழுவதும் சுனாமியில் மாய்ந்து போயினர்.அப்போது, உலகம் முழுவதிலிருந்தும் உதவிக் கரங்கள் நாகையை நோக்கி நீண்டன. இருப்பவர் கள் பொருள் கொடுத்தும் இல்லாதவர்கள் சேவை செய்யவும் ஓடோடி வந்தனர். அப்படி வந்தவர்தான் பிரேமாரேவதி.பிரேமா ரேவதி, சென்னையில் திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். நாடகஇயக்குநர் அ.மங்கையின் ’மரப்பாச்சி’ நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தவர். சுனாமியின் போது, நாகைக்குச் சேவை செய்ய வந்தவர், இங்கேயே தங்கிவிட்டார்.கல்வி இல்லாமல், இருக்க இடமில்லாமல், குளிக்காமல், சரியான உடைகள் இல்லாமல் ‘பூம் பூம் மாட்டுக் காரக் குழந்தைகளும் நரிக் குறவர் பிள்ளைகளும் பிச்சை எடுத்துத் திரிவதைக் கண்ட ரேவதி, அந்தச் சமுதாய மக்களுக்கு, அவர் களின் குழந்தைகளுக்கு முதலில் கல்வி அளிக்க வேண்டும் என முடிவுசெய்து, நாகப்பட்டினம், மறைமலை நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதற்கு ‘வானவில் பள்ளி’ எனப் பெயர் வைத்து, சுற்றித்திரிந்த அந்த நடோடிக் குழந்தைகளைத் தேடித் தேடி அழைத்து வந்து, அவர்களது பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று, வானவில் பள்ளியில் ஆரம்பத்தில் ஏறக்குறைய 20 பிள்ளைகளைத் தங்கவைத்து, அவர்களுக்குத் தாயாகவும் தந்தையுமாக மாறி, புதிய உடைகள் அணிவித்து, 3 வேளையும் உணவு கொடுத்து, முதலில், தானேஆசிரியராக இருந்து கல்வி கற்றுக் கொடுத்தார்.


இந்தப் பள்ளியைத் தொடர்ந்துநடத்திட எத்தனையோ சோதனைகள் நேரிட்டன. சென்னையில் திரைத்துறையிலும், மற்ற நிறுவனங்களிலும் பொருளுதவி பெற்றுத் தளராமல் பள்ளியை நடத்தினார். இந்தப் பள்ளி வளர்ந்து புகழ் பெற்றதும், ‘ரிலையன்ஸ்’ போன்ற எத்தனையோ முதலாளித்துவ நிறுவனங்கள் விலைக்குக் கேட்டன.பணத்தை விரும்பாத ரேவதி, இந்தப் பள்ளிக்காகவும், அந்த நாடோடிப் பிள்ளைகளுக்காவும் உழைத்தார். நாகையில் இருந்தபள்ளியை சிக்கல்-கீழ்க்கரையிருப்பில் சொந்தக் கட்டிடம் கட்டி, அங்கு மாற்றினார். மேலும்சில ஆசிரியைகளைப் பணியமர்த்தி கல்வி கற்பிக்க வைத்தார். வானவில் பள்ளியை உண்டு, உறைவிடப் பள்ளியாக மாற்றினார்.சிக்கலுக்கு அருகில், புதுச் சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2019 மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை, வானவில் பள்ளி மாணவர்கள் முதல் தலைமுறையாக எழுதினர்.இதோ, அன்று சுனாமியின் போது நாடோடியாகத் திரிந்த மாணவன் வீ.குருபாலன், 10-ம் வகுப்புப் பொதுதேர்வில் 500-க்கு 364 மதிப்பெண்கள் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனாகவும், 500-க்கு 340 மதிப்பெண்கள் எடுத்துஎம்.ஆர்த்தி, பள்ளியில் இரண்டாவது மாணவியாகவும் இன்று புகழ் பெற்றிருக்கிறார்கள்.இந்தச் சமூகத்தில் கேட்பாரற்றும் கவனிப்பாரற்றும் சுற்றித்திரிந்த இந்த நாடோடிக் குழந்தைகளுக்கு உணவளித்து, கல்வியளித்து அவர்களும் மனிதர்கள் தான் என்று, அவர்களைத் தலைநிமிர வைத்த பெருமையும் சாதனையும் பிரேமா ரேவதியையே சாரும்.-


ந.காவியன்